மீண்டும் சொதப்பிய ரோஹித் சர்மா.. திருப்பத்தை ஏற்படுத்திய பந்துவீச்சாளர்... விளாசும் ரசிகர்கள்.. நடந்தது என்ன?

வாஷிங்டன் சுந்தருக்கு உடனடியாக பந்து வீச வாய்ப்பு வழங்கப்படவில்லை. தொடர்ந்து பும்ரா, முகமது சிராஜ் மற்றும் ஆகாஷ் தீப் மாற்றி, மாற்றி பந்து வீசினர். 


மீண்டும் சொதப்பிய ரோஹித் சர்மா.. திருப்பத்தை ஏற்படுத்திய பந்துவீச்சாளர்... விளாசும் ரசிகர்கள்.. நடந்தது என்ன?

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் பிளேயிங் லெவனில் வாஷிங்டன் சுந்தரை சேர்த்த நிலையிலும் அவருக்கு முதல் 52 ஓவர்கள் வரை பந்து வீச வாய்ப்பு அளிக்காமல் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மிகப்பெரிய சொதப்பல் ஒன்றை செய்தமை கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

இந்திய அணியில் இரண்டு சுழற் பந்துவீச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டதுடன்,  அணியில் இருந்து சுப்மன் கில் நீக்கப்பட்டதுடன், அவருக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டார். ஏற்கனவே சுழற் பந்துவீச்சாளர் ரவீந்திர ஜடேஜா அணியில் இருந்து வருகிறார்.

இந்த போட்டியில், ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நிலையில், ஆஸ்திரேலிய அணியின் வீரர்கள் வரிசையாக ரன் குவிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், முதல் 52 ஓவர்கள் வரை வாஷிங்டன் சுந்தருக்கு பந்து வீச வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் முதல் விக்கெட்டை ரவீந்திர ஜடேஜா வீழ்த்தியதை அடுத்து, மற்றொரு சுழற் பந்துவீச்சாளரான சுந்தரை கேப்டன் ரோஹித் சர்மா பந்து வீச அழைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனாலும், வாஷிங்டன் சுந்தருக்கு உடனடியாக பந்து வீச வாய்ப்பு வழங்கப்படவில்லை. தொடர்ந்து பும்ரா, முகமது சிராஜ் மற்றும் ஆகாஷ் தீப் மாற்றி, மாற்றி பந்து வீசினர். 

ஒரு கட்டத்தில் 154 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்து இருந்த ஆஸ்திரேலிய அணி, அடுத்து 237 ரன்கள் வரை விக்கெட் இழக்காமல் ரன் குவித்தது.  ரன் குவிப்பில் ஈடுபட்ட மார்னஸ் லாபுஷேன் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இணையை பிரிக்க முடியாமல் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர்கள் திணறினர். 

52 வது ஓவரின் முடிவில் தான் வாஷிங்டன் சுந்தருக்கு பந்துவீச ரோஹித் சர்மா அழைப்பு விடுத்தார். வாஷிங்டன் சுந்தர் பந்து வீச துவங்கிய பின் சில ஓவர்களில் மார்னஸ் லாபுஷேன் விக்கெட்டை வீழ்த்தினார். அதன் பின் ஆஸ்திரேலிய அணி அடுத்த 9 ரன்களை எடுப்பதற்குள் 3 விக்கெட்களை வரிசையாக இழந்தது. 

அதற்கு முக்கிய காரணமாக இருந்தது வாஷிங்டன் சுந்தர்தான். அவரை ஆட்டத்தின் முதல் பகுதியிலேயே பயன்படுத்தி இருந்தால் ஆஸ்திரேலிய அணியை ஓரளவு கட்டுப்படுத்தி இருக்கலாம் என்ற போதும், ரோஹித் சர்மா அதை செய்யவில்லை. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 86 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் எடுத்தது. 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Colombo Tamil WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Colombo Tamil.

Add Colombo Tamil as a Preferred Source Add as a preferred source on Google