திரையுலகில் பெண்கள் ஓரங்கட்டப்படுகிறார்கள்: நடிகை பார்வதி திருவோத்து வேதனை
‘பூ’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மலையாள நடிகை பார்வதி திருவோத்து, திரையுலகில் பெண்கள் எதிர்கொள்ளும் ஓரங்கட்டல் குறித்து வேதனையுடன் குரல் கொடுத்துள்ளார். கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியான ‘தங்கலான்’ படத்தில் தனது வலுவான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த இவர், 17 ஆண்டுகளுக்கும் மேலான சினிமா பயணத்தில் தமிழில் குறைந்த படங்களிலேயே நடித்திருந்தாலும், மலையாளத்தில் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களைத் தேர்வு செய்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார்.
சினிமா மட்டுமின்றி, திரைப்படத் துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சமூக விவகாரங்கள் குறித்தும் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் பார்வதி, தற்போது பெண்களின் நிலைமை குறித்து பேசிய கருத்துகள் திரையுலகில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளன.
இதுகுறித்து அவர் கூறியதாவது: "நாம் எல்லாவற்றையும் சரியாகச் செய்து, சிறந்த நடிப்பைக் கொடுத்து, நம் படங்கள் சூப்பர் ஹிட்டானால், நம் திறமைக்குத்தான் இங்கு மதிப்பு கிடைக்கும் என்று நான் உண்மையாகவே நினைத்தேன். என்னால் நடிப்பையும், பாக்ஸ் ஆபீஸ் வெற்றியையும் இரண்டையும் தர முடிகிறது. அப்படியிருந்தும் நான் ஏன் திரையுலகில் ஓரங்கட்டப்படுகிறேன் என்று எனக்குள்ளேயே கேட்டுக்கொண்டேன்."
மேலும், "அப்போதுதான் எனக்குப் புரிந்தது. இந்த சினிமா சிஸ்டத்தைப் பொறுத்தவரை, பெண்கள் எப்போதுமே ‘தேவையற்றவர்கள்’ என்பதுதான் அடிப்படை விதி. நீங்கள் எவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டாராக இருந்தாலும், எவ்வளவு பணம் சம்பாதித்துக் கொடுத்தாலும், நீங்கள் பேசும் உண்மைகள் அவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தினால், உங்களை எளிதாகத் தூக்கி எறிந்துவிடுவார்கள்" என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
சினிமா துறையில் பெண்களுக்கான இடம் குறித்து இவ்வளவு திறந்த மனதுடன் பேசியுள்ள பார்வதியின் இந்தக் கருத்துகள், திரையுலகம் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை எழுப்பியுள்ளன. பல பெண் இயக்குநர்கள் மற்றும் நடிகைகளும் இவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
