ஹாலிவுட் நடிகர் மரணம்: இந்திய வம்சாவளி பெண்ணுக்கு 15 ஆண்டு சிறை
பிரபல ஹாலிவுட் நடிகர் Matthew Perry மரணம் தொடர்பான வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள தனது வீட்டில் அவர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். பின்னர் நடந்த விசாரணையில், அதிகளவு போதைப்பொருள் பயன்படுத்தியதே அவரது மரணத்திற்கு காரணம் என உறுதி செய்யப்பட்டது.
இந்த வழக்கில், அவருக்கு போதைப்பொருள் வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த Jasveen Sangha உள்ளிட்ட ஐந்து பேருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. இதில் ஜஸ்வீன் சங்காவுக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாபி வம்சாவளியைச் சேர்ந்த ஜஸ்வீன் சங்கா, இங்கிலாந்தின் லண்டனில் பிறந்தவர். அவர் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு நாடுகளின் குடியுரிமையையும் பெற்றிருந்தார். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிரபலங்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்து வந்ததாகவும், “கெட்டமைன் ராணி” என அழைக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேத்யூ பெர்ரிக்கு கெட்டமைன் போதைப்பொருளை, ஜஸ்வீன் சங்கா மற்றும் Erik Fleming இணைந்து வழங்கியிருப்பது விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் ஹாலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
