5 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்த பும்ரா.. கபில்தேவ், வசீம் அக்ரம் ரெக்கார்ட் முறியடிப்பு
இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி 6 ரன்கள் முன்னிலை பெற்று உள்ளது.

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி 6 ரன்கள் முன்னிலை பெற்று உள்ளதுடன், பும்ரா ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததுடன், இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணி 471 ரன்கள் குவித்தது. இதனை அடுத்து இங்கிலாந்து அதிரடியாக விளையாடி 209 ரன்களுக்கு மூன்று விக்கெட் என்ற ஸ்கோருடன் மூன்றாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது.
இதில் ஆலி போப் 11 பவுண்டரி, 2 சிக்சர் என 106 ரன்களில் ஆட்டம் இழந்தார். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 99 ரன்களில் ஹாரி புரூக் ஆட்டம் இழந்தார்.
கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 20 ரன்கள் வெளியேற ஜெமி ஸ்மித் 40 ரன்கள் எடுக்க இங்கிலாந்து அணி சரிவை நோக்கி சென்ற நிலையில், கிறிஸ் வொக்ஸ் அதிரடி காட்டி 38 ரன்களும், பிரைடன் கார்ஸ் 22 ரன்களும் எடுக்க இங்கிலாந்து அணி 465 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனை அடுத்து 6 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை விளையாடுகிறது.
இந்திய அணியின் வீரர் பும்ரா ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், பிரசித் கிருஷ்ணா மூன்று விக்கெட்டுகளையும், சிராஜ் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்கள்.
இதன்போது, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஆசிய வீரர் என்ற சாதனையை பும்ரா படைத்திருக்கிறார்.
இந்த நாடுகளில் விளையாடி வசிம் அக்ரம் 146 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில் தற்போது பும்ரா 147 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளதுடன், இந்த நாடுகளில் அதிக முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பட்டியலில் முரளிதரன் சாதனையை பும்ரா தற்போது சமன் செய்துள்ளார்.
வசீம் அக்ரம் 11 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், முரளிதரன் பத்து முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.
இதேவேளை, இந்தியாவிற்கு வெளியே 12 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக முறை ஐந்து விக்கெட்டுகளை இந்தியாவுக்கு வெளியே கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை பும்ரா படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.