“ஜன நாயகன்” படம் இணையத்தில் கசிவு – விஜய் படக்குழுவினர் அதிர்ச்சி
நடிகரும் த.வெ.க. தலைவருமான Vijay நடித்துள்ள “ஜன நாயகன்” திரைப்படம் இணையத்தில் சட்டவிரோதமாக கசிந்தது படக்குழுவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கே.வி.என். புரொடக்ஷன் தயாரித்துள்ள இந்த படம், தணிக்கை சான்றிதழுக்காக சமர்ப்பிக்கப்பட்டபோது, மதம் மற்றும் பாதுகாப்பு படைகள் தொடர்பான சில காட்சிகள் இருப்பதால் மறுஆய்வு குழுவிற்கு அனுப்பப்பட்டது.
இதையடுத்து நீண்ட கால போராட்டத்திற்குப் பிறகு, தயாரிப்பு நிறுவனம் படத்தை மறுதணிக்கைக்காக மீண்டும் அனுப்பியுள்ளது. விரைவில் சென்சார் சான்றிதழ் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய்யின் கடைசி படமாக கூறப்படும் “ஜன நாயகன்”, முதலில் பொங்கல் வெளியீடாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் சென்சார் சிக்கல்கள் காரணமாக வெளியீடு தாமதமானது. பின்னர், தமிழ்நாடு சட்டசபை தேர்தல் முடிந்ததும் மே மாதம் இரண்டாவது வாரத்தில் படம் வெளியிட திட்டமிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த விஜய், தனது படத்திற்கு திட்டமிட்டு பிரச்சினைகள் உருவாக்கப்படுகின்றன என்று குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்த சூழலில், நேற்று மாலை “ஜன நாயகன்” படத்தின் சில காட்சிகள் இணையத்தில் வெளியானது. தொடர்ந்து இன்று அதிகாலை, சுமார் 3 மணி நேரம் கொண்ட முழு திரைப்படமும் ஆன்லைனில் கசிந்ததாக கூறப்படுகிறது.
இதனால் தயாரிப்பு நிறுவனமும், படக்குழுவினரும், ரசிகர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அரசியல் காரணங்களால் இந்த கசிவு நடந்திருக்கலாம் என்று விஜய் ரசிகர்கள் மற்றும் தயாரிப்பு தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இணையத்தில் வெளியான படத்தை நீக்குவதற்கான நடவடிக்கைகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
