3 அணிகள் கடும் போட்டி... ஐபிஎல் பிளேஆஃபில் நுழையும் 4ஆவது அணி எது?
ஐபிஎல் 2026 தொடரின் லீக் சுற்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பிளேஆஃப் சுற்றின் கடைசி இடத்துக்கான போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பிளேஆஃப் சுற்றை உறுதி செய்துள்ளன. தற்போது எஞ்சியுள்ள ஒரே இடத்துக்காக பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிக் கொண்டிருக்கின்றன.
லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை வீழ்த்தியதன் மூலம் பஞ்சாப் கிங்ஸ் மீண்டும் பிளேஆஃப் நம்பிக்கையை உயிர்ப்பித்துள்ளது. தொடர்ந்து தோல்விகளை சந்தித்த அந்த அணிக்கு கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரின் அதிரடி சதம் மிகப்பெரிய திருப்பமாக அமைந்தது. இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் தற்போது 15 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.
ஆனால் பஞ்சாப்பின் வாய்ப்பு இன்னும் முழுமையாக உறுதி ஆகவில்லை. இன்று நடைபெறும் போட்டிகளின் முடிவுகளே அவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகின்றன. குறிப்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மும்பை இந்தியன்ஸை எதிர்த்து வெற்றி பெறக்கூடாது என்பதே பஞ்சாப்பின் முக்கிய எதிர்பார்ப்பு. போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டு புள்ளிகள் பகிரப்பட்டாலும் ராஜஸ்தானுக்கு சாதகமாக அமையாது; அப்போது நெட் ரன்ரேட் அடிப்படையில் பஞ்சாப் முன்னிலை வகிக்கும்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கணக்கு மிகவும் எளிதானது. மும்பை இந்தியன்ஸை வென்றால் அவர்கள் நேரடியாக பிளேஆஃப் சுற்றுக்குள் நுழைந்து விடுவார்கள். ஆனால் தோல்வி அல்லது மழையால் போட்டி கைவிடப்பட்டால், அவர்களின் வாய்ப்பு முடிவுக்கு வரும் அபாயம் உள்ளது. இதற்கு மேலாக அணியில் காயம் பிரச்சினைகளும் அவர்களை பாதித்துள்ளன. கேப்டன் ரியான் பராக் மற்றும் ரவீந்திர ஜடேஜா முழு உடல் தகுதியில் இல்லாதது அணிக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
பந்துவீச்சு பிரிவிலும் நிலைத்தன்மை இல்லாதது ராஜஸ்தானுக்கு சவாலாக உள்ளது. வேகப்பந்துவீச்சாளர்களை தொடர்ந்து மாற்றி பயன்படுத்தி வருவது அணியின் சமநிலையை பாதித்துள்ளது. அதனால் மும்பைக்கு எதிரான போட்டி அவர்களுக்கு ‘வெற்றி அல்லது வெளியேறு’ என்ற நிலையை உருவாக்கியுள்ளது.
மறுபுறம், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நிலை இன்னும் சிக்கலானது. அந்த அணி பிளேஆஃப் சுற்றுக்குள் நுழைய வேண்டுமெனில் டெல்லி கேபிட்டல்ஸை மிகப்பெரிய வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும். அதோடு, ராஜஸ்தான் ராயல்ஸ் தோற்க வேண்டும் என்பதும் அவசியம்.
தற்போது கேகேஆரின் நெட் ரன்ரேட் மிகவும் குறைவாக இருப்பதால், சாதாரண வெற்றி அவர்களுக்கு போதாது. உதாரணமாக 200 ரன்கள் எடுத்தால் குறைந்தது 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டிய சூழல் உள்ளது. அல்லது இலக்கை மிகக் குறைந்த ஓவர்களில் சேஸ் செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
அந்த அணிக்கும் காயம் பிரச்சினைகள் தலைவலியாக மாறியுள்ளன. அணியின் முக்கிய ரன் ஸ்கோரராக இருந்த அங்ரிஷ் ரகுவன்ஷி காயத்தால் தொடரிலிருந்து வெளியேறியுள்ளார். மேலும் வருண் சக்கரவர்த்தியும் முழு உடல் தகுதியில் இல்லை. இதனால் அணியின் பந்துவீச்சு பலவீனப்பட வாய்ப்பு உள்ளது.
இந்த சூழ்நிலையில் பஞ்சாப் கிங்ஸ்க்கே அதிக வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட் வட்டாரங்கள் கருதுகின்றன. காரணம், ராஜஸ்தான் மற்றும் கேகேஆர் இரு அணிகளும் வெற்றி மட்டுமல்லாமல், பல கணக்குகளையும் கடக்க வேண்டிய நிலை உள்ளது. எனினும், ஐபிஎல் என்பதால் கடைசி நொடி வரை எதுவும் நடக்கலாம் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.
