தோனி, கோலி சொல்லி கொடுத்த பாடம்... வெற்றியின் ரகசியம் இதுதான்.. ஜாஸ் பட்லர் அதிரடி பேச்சு !!

Key Points
  • சதம் அடித்து ராஜஸ்தான் அணிக்கு வெற்றியையும் பெற்று கொடுத்த ஜாஸ் பட்லரே போட்டியின் ஆட்டநாயகனாவும் தேர்வு செய்யப்பட்டார்.
தோனி, கோலி சொல்லி கொடுத்த பாடம்... வெற்றியின் ரகசியம் இதுதான்.. ஜாஸ் பட்லர் அதிரடி பேச்சு !!

நடப்பு ஐபிஎல் தொடரின் 31வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சுனில் நரைன் 109 ரன்கள் எடுத்தார்.

224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு அந்த அணியின் ஜாஸ் பட்லர் இறுதி வரை களத்தில் நின்று தனி ஆளாக போராடியதோடு, 60 பந்துகளில் 107 ரன்கள் குவித்து கடைசி பந்தில் ராஜஸ்தான் அணிக்கு வெற்றியையும் பெற்று கொடுத்தார். 

அத்துடன், சதம் அடித்து ராஜஸ்தான் அணிக்கு வெற்றியையும் பெற்று கொடுத்த ஜாஸ் பட்லரே போட்டியின் ஆட்டநாயகனாவும் தேர்வு செய்யப்பட்டார்.

ஆட்டநாயகன் விருது வென்றபிறகு பேசிய ஜாஸ் பட்லர், தோனி, கோலி போன்ற வீரர்கள் கடைசி வரை களத்தில் நின்று தங்களது அணிக்கு வெற்றியை பெற்று கொடுப்பதை போன்று தான் தானும் விளையாடியதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஜாஸ் பட்லர் பேசுகையில், “நம்பிக்கை ஒன்று மட்டுமே இன்றைய நாளில் எனது சிறப்பான பேட்டிங்கிற்கு முக்கிய காரணம். நான் சிறிது தடுமாறியது உண்மை தான். நாம் நினைத்ததை போன்று விளையாட முடியாமல் தடுமாறும் போது விரக்தி ஏற்படும், நம் மீதே நமக்கு சந்தேகம் ஏற்படும். 

ஆனால் நான் என்னிடம் எதுவும் இன்னும் முடியவில்லை, நம்பிக்கையுடன் இரு என கூறி கொண்டே இருந்தேன், இதன் மூலமே எனக்கு நம்பிக்கையும் கிடைத்தது. தோனி, கோலியை போன்ற வீரர்கள் கடைசி வரை களத்தில் இருந்து போட்டியை வெற்றிகரமாக முடித்து கொடுத்து வருவதை நாம் பல முறை பார்த்து வருகிறோம், நானும் இந்த போட்டியில் அதை தான் செய்தேன்.

எங்கள் பயிற்சியாளரான சங்ககாராவும் என்னிடம் நம்பிக்கையை பற்றி பேசி கொண்டே இருப்பார். நாம் நினைத்தது நடக்காத போது உடனே நம்பிக்கையை இழந்துவிட கூடாது, போட்டி எப்போதும் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் மாறலாம், எனவே நாம் அதற்காக பொறுமையாக காத்திருக்க வேண்டும் என சங்ககாரா கூறுவார். 

கொல்கத்தா அணிக்கு எதிரான எனது இந்த இன்னிங்ஸ் ஐபிஎல் தொடரில் எனது சிறந்த இன்னிங்ஸ் என்று கூட கூறலாம், இந்த போட்டியில் எனது பேட்டிங் முறை எனக்கே திருப்திகரமாக இருந்தது” என்றார்.

Click for more latest கிரிக்கெட் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
Add ColomboTamil As A Trusted Source Add as a preferred source on Google