தோனி இருக்கும் வரை சிஎஸ்கே பயிற்சியாளர் பதவி வேண்டாம்: தெறித்து ஓடும் பயிற்சியாளர்கள்!

தோனி இருக்கும் வரை சிஎஸ்கே பயிற்சியாளர் பதவி வேண்டாம்: தெறித்து ஓடும் பயிற்சியாளர்கள்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங்கை மாற்றும் திட்டத்தில் நிர்வாகம் தீவிரம் காட்டி வரும் நிலையில், அந்தப் பொறுப்பை ஏற்க முன்னணி பயிற்சியாளர்கள் தயக்கம் தெரிவிப்பதாகச் சிஎஸ்கே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த எதிர்பாராத மறுப்புகளுக்குப் பின்னால் `தல’ தோனியின் தொடர் செல்வாக்கே முக்கியக் காரணம் என்பது அம்பலமாகியுள்ளது. தோனி அணியில் நீடிக்கும் வரை தங்களால் எந்தவொரு சுதந்திரமான முடிவையும் எடுக்க முடியாது; தங்களது பயிற்சித் திறமையை முழுமையாக வெளிப்படுத்த முடியாது என்ற அச்சமே பலரையும் பின்வாங்க வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

2023-ல் ஐபிஎல் கோப்பையை வென்ற சிஎஸ்கே, அதன்பின் 2024, 2025, 2026 ஆகிய மூன்று தொடர்களிலும் பிளே-ஆப் சுற்றுக்குள் நுழைய முடியாமல் தடுமாறி வருகிறது. தொடர்ச்சியான தோல்விகள் பிளெமிங் மீதான அழுத்தத்தைக் கூட்ட, அணியைப் புத்துயிர்ப்பிக்கப் புதிய தலைமைப் பயிற்சியாளரை நியமிக்க நிர்வாகம் முடிவு செய்தது.

கடந்த ஆண்டு சிஎஸ்கேவுடன் நெருக்கமான ஒரு மூத்த இந்தியப் பயிற்சியாளரிடம் பேச்சு நடத்தப்பட்டபோது, சிறிது காலம் காத்திருங்கள்’ என நிர்வாகமே அவரிடம் தெரிவித்ததாகத் தகவல்கள் கசிந்துள்ளன. மற்றொரு புகழ்பெற்ற பயிற்சியாளர் நேரடியாகவேதோனி அணியில் இருக்கும் வரை இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கவே மாட்டேன்’ என உறுதியாக மறுத்துவிட்டார்.

தினசரி அணி மேலாண்மை, முக்கிய உத்திகள், வீரர் தேர்வு ஆகியவற்றில் தோனியின் கருத்துகள் இறுதி முடிவாக மாறும் சூழலில், தலைமைப் பயிற்சியாளரின் அதிகாரம் வெறும் பெயரளவில்தான் இருக்கும் என்றே அவர்கள் கருதுகின்றனர்.

2026 ஐபிஎல் முழுவதும் காயம் காரணமாகத் தோனி ஓர் ஆட்டத்தில்கூட களமிறங்கவில்லை. இருந்தபோதும், ஒவ்வொரு போட்டி முடிந்த பின்னரும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டிடம் கேட்கப்பட்ட ஒரே கேள்வி `தோனியின் உடல்நிலை என்ன?’ என்பதாகவே இருந்தது.

இது கேப்டன் மற்றும் பயிற்சியாளர் இருவரையும் நெருக்கடிக்கு உள்ளாக்கியதோடு, தோனியின் நிழல் அணியின் முழு அதிகார அமைப்பையும் மறைத்து நிற்பதை உணர்த்தியது. தோனி தனது ஓய்வு குறித்து எந்த உறுதியான முடிவையும் அறிவிக்காத நிலையில், புதிய பயிற்சியாளரால் அணிக்குள் தனது முத்திரையைப் பதிக்க முடியுமா என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

பிளே-ஆப் வாய்ப்பு மீண்டும் ஒருமுறை கைநழுவியுள்ள இந்தத் தருணத்தில், சிஎஸ்கே நிர்வாகம் இந்த நெருக்கடியை எவ்வாறு கையாளப் போகிறது என்பதே ரசிகர்களின் பரபரப்பான எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.