இலங்கையில் காவலில் உள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் கோரிக்கை

Key Points
  • தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் இன்று (மே 27) புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார்.
  • தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும் துன்புறுத்தப்படுவதும் அதிகரித்துள்ளதாக தெரிவிப்பு.
இலங்கையில் காவலில் உள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் கோரிக்கை

தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் இன்று (மே 27) புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது தமிழ்நாட்டுக்கான முக்கிய கோரிக்கைகள் பலவற்றைப் பிரதமரிடம் முதல்-அமைச்சர் முன்வைத்தார்.

இந்தச் சந்திப்பின் தொடக்கத்தில், தமது நெதர்லாந்து பயணத்தின்போது ஆனைமங்கலச் செப்பேடுகளை மீட்டு இந்தியாவுக்குக் கொண்டு வந்தமைக்கு முதல்வர் விஜய் பிரதமருக்கு நன்றி தெரிவித்தார்.

மாநில வாழ்த்துப் பாடலான `தமிழ்த்தாய் வாழ்த்து' தமிழ்நாட்டின் அனைத்து அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்திலும் பாரம்பரியமாகப் பாடப்பட்டு வரும் நிலையில், சில நிகழ்ச்சிகளில் தேசியப் பாடல் முதலில் பாடப்படுவதாகச் சுட்டிக்காட்டிய முதல்வர், அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் மாநில வாழ்த்துப் பாடலைப் பாடுவது குறித்து உள்துறை அமைச்சகம் உரிய தெளிவுரை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மேம்பட்ட நடுத்தர போர் விமான (AMCA) வடிவமைப்பு மையம் மற்றும் வான்வழி அமைப்பு மையம் (CABS) ஆகியவற்றைத் தமிழ்நாட்டில் அமைப்பது தொடர்பாக DRDO-வுடன் ஆலோசனைகள் நடைபெறும் நிலையில், வான்வழி அமைப்பு மையத்தைத் (CABS) தமிழ்நாட்டில் அமைக்குமாறும் முதல்வர் கேட்டுக்கொண்டார்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணைத் திட்டத்துக்கான பூமி பூஜை நடத்தவுள்ளதாக கர்நாடக துணை முதல்வர் அறிவித்திருப்பது காவிரி நடுவர் மன்ற (CWDT) இறுதித் தீர்ப்புக்கும் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கும் முற்றிலும் முரணானது என்றும், இந்த அறிவிப்பு தமிழ்நாட்டு விவசாயிகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது என்றும் முதல்வர் வலியுறுத்தினார்.

எனவே, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய இணை ஆற்றுப்படுகை மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் இந்தத் திட்டத்தை அனுமதிக்கக் கூடாது என்று ஜல் சக்தி அமைச்சகத்துக்கும், மத்திய நீர்வள ஆணையத்துக்கும் பிரதமர் அறிவுறுத்துமாறும் முதல்வர் கேட்டுக்கொண்டார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும் துன்புறுத்தப்படுவதும் மிகக் கவலைக்கிடமான அளவுக்கு அதிகரித்துள்ளதாக முதல்வர் விஜய் பிரதமரிடம் எடுத்துரைத்தார்.

2026-ம் ஆண்டில் மட்டும் 12 கைது சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகவும், தற்போது 58 மீனவர்கள் இலங்கையில் காவலில் உள்ளனர் என்றும், 266 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றும் தெரிவித்த அவர், மீனவர்களையும் அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க இலங்கை அரசை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.