சோனியா - ராகுல் சந்திப்பு ரத்து.. டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய விஜய்

டெல்லி அரசுமுறை பயணத்தை முடித்த முதல்-அமைச்சர் விஜய், சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியுடன் நடைபெற இருந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்ட நிலையில் சென்னை புறப்பட்டார்.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் Add as a preferred source on Google
சோனியா - ராகுல் சந்திப்பு ரத்து.. டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய விஜய்

தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்த த.வெ.க. தலைமையிலான கூட்டணி அரசு தற்போது மாநிலத்தில் பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறது. காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், வி.சி.க., ஐ.யு.எம்.எல். உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் அமைந்துள்ள இந்த கூட்டணியில், முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றுள்ளது.

முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு விஜய் முதல் முறையாக இரண்டு நாள் அரசுமுறை பயணமாக டெல்லி சென்றிருந்தார். இந்த பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் கோரிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்தித்து மாநில வளர்ச்சி தொடர்பான கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை விஜய் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. மேலும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழக அரசின் நிதியுதவியுடன் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலையை திறந்து வைக்கும் நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் எதிர்பாராத வகையில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியுடன் நடைபெற இருந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து தனது டெல்லி பயணத்தை முடித்துக்கொண்ட முதல்-அமைச்சர் விஜய், தனி விமானம் மூலம் சென்னை புறப்பட்டார்.

Click for more latest உலகம் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.