காலணிகள் மற்றும் பயிற்சிப் பொருட்கள் திருட்டு: இங்கிலாந்து கால்பந்து அணிக்கு அதிர்ச்சி!
- 1966ஆம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் உலகக் கோப்பையை கைப்பற்றும் இலக்குடன் களமிறங்கும் அணிக்கு இந்த சம்பவம் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான தயாரிப்புகளில் ஈடுபட்டுள்ள இங்கிலாந்து அணிக்கு எதிர்பாராத சிக்கல் ஏற்பட்டுள்ளது. அணியின் காலணிகள் உள்ளிட்ட முக்கிய பயிற்சிப் பொருட்கள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் Missouri மாநிலத்தில் உள்ள கான்சஸ் சிட்டி (Kansas City) நகரில் இங்கிலாந்து அணி தனது பயிற்சி முகாமை அமைத்துள்ளது. அங்கு முதல் பயிற்சி அமர்வுக்கு முன்னதாகவே வீரர்களின் காலணிகள், கால்பந்துகள் மற்றும் பிற பயிற்சிப் பொருட்கள் களவாடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு சந்தேகநபர்களை கைது செய்துள்ளதாக கான்சஸ் சிட்டி பொலிஸ் தெரிவித்துள்ளது. திருடப்பட்ட பொருட்களை மீட்கும் நடவடிக்கையில் பொலிஸாருடன் இங்கிலாந்து அணி ஒத்துழைத்து வருவதாகக் கூறப்படுகிறது.
இங்கிலாந்து அணி தனது முதல் உலகக் கோப்பை போட்டியில் எதிர்வரும் 18 ஆம் திகதி அதிகாலை களமிறங்க உள்ளது. 1966ஆம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் உலகக் கோப்பையை கைப்பற்றும் இலக்குடன் களமிறங்கும் அணிக்கு இந்த சம்பவம் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்பும் அணியின் பயிற்சி முகாமுக்கு அருகில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் கவலையை ஏற்படுத்தியிருந்தது. அந்த தாக்குதலில் ஒன்பது பேர் காயமடைந்தபோதிலும், இங்கிலாந்து அணியின் வீரர்கள் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை.
உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்பே தொடர்ச்சியாக ஏற்பட்டுள்ள இந்த சம்பவங்கள், இங்கிலாந்து அணியின் பாதுகாப்பு மற்றும் தயாரிப்பு நடவடிக்கைகள் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளன.


