இந்திய அணி ஜெர்ஸியில் மீண்டும் காவி.. டி20 உலக கோப்பையில் வரும் மாற்றம்!

Key Points
  • அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ்-இல் ஜூன் மாதம் 1ஆம் தேதி முதல் ஜூன் 29 வரை டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது.
இந்திய அணி ஜெர்ஸியில் மீண்டும் காவி.. டி20 உலக கோப்பையில் வரும் மாற்றம்!

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ்-இல் ஜூன் மாதம் 1ஆம் தேதி முதல் ஜூன் 29 வரை டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது.

முதல் போட்டியில் அமெரிக்கா - கனடா அணிகள் மோதவுள்ளதுடன், 20 அணிகள் பங்கேற்கும் இந்த டி20 உலகக்கோப்பை தொடரில், ஒவ்வொரு குரூப்பிலும் 5 அணிகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடக்கவுள்ளது.

இதில் இந்திய அணி விளையாடும் குரூப் சுற்று போட்டிகள் அனைத்து அமெரிக்காவிலேயே நடத்தப்படும். அதில் முதல் போட்டியில் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டி ஜூன் 5ஆம் தேதி நியூயார்க் மைதானத்தில் நடக்கின்றது.

அத்துடன், இந்தியா - பாகிஸ்தான் போட்டி ஜூன் 9ஆம் தேதி நியூயார்க் மைதானத்திலும் நடத்தப்படவுள்ளது. ஜூன் 12ஆம் தேதி இந்தியா - அமெரிக்கா அணிகள் விளையாடும். ஜூன் 15ஆம் தேதி ஃபுளோரிடாவில் நடக்கும் போட்டியில் இந்தியா - கனடா அணிகள் மோதும்.

ஏற்கெனவே டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளதுடன்,  இந்த அணியில் மாற்றம் செய்ய மே 25ஆம் தேதி வரை அவகாசம் உள்ளது.

இதனால் ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் முடிவடைந்த பின், 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி உறுதி செய்யப்படும் என்று கூறப்படுகின்றது.

இந்த நிலையில் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி ஜெர்ஸி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதுடன், இந்த வீடியோவில் கேப்டன் ரோகித் சர்மா, ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய 3 பேரும் இடம்பெற்றுள்ளனர்.

இந்த ஜெர்ஸியில் வழக்கத்திற்கு மாறாக நீல நிறத்திற்கு பதிலாக காவி நிறம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் இந்திய அணியின் டி20 ஜெர்ஸியில் காவி நிறமே இடம்பெறாத நிலையில், வெள்ளை நிறமே இருந்தது. 

தற்போது வெள்ளை நிறத்தை குறைத்து காவி நிறம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இந்திய அணியின் பயிற்சி ஆடை முழுவதும் காவி நிறமாக மாற்றப்பட்டது.

2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் முழுமையாக காவி நிற ஜெர்ஸியில் இந்திய அணி களமிறங்கியது. 

இதற்கு பாஜகவே காரணம் என்று பல்வேறு தரப்பினரும் விமர்சித்த நிலையில்,  தற்போதும் இந்திய அணி ஜெர்ஸியில் மீண்டும் காவி நிறம் அதிகரித்துள்ளதற்கு, பிசிசிஐ செயலாளரான ஜெய் ஷாவே காரணம் என்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

Click for more latest கிரிக்கெட் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
Add ColomboTamil As A Trusted Source Add as a preferred source on Google