இந்தியா மீது விதிக்கப்பட்ட 50% இறக்குமதி வரியை ரத்து செய்ய அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் தாக்கல்

இந்திய பொருட்கள் மீது விதிக்கப்பட்டுள்ள 50 சதவீத இறக்குமதி வரியை முழுமையாக ரத்து செய்யக்கோரி அமெரிக்க நாடாளுமன்றம்த்தில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்தியா மீது விதிக்கப்பட்ட 50% இறக்குமதி வரியை ரத்து செய்ய அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் தாக்கல்

உக்ரைன் – ரஷியா போர் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் சூழலில், ரஷியாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது அமெரிக்க அரசு கடுமையான வரிவிதிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. 

அதன் ஒரு பகுதியாக, இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீத இறக்குமதி வரி விதிக்க டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டார். இதன் விளைவாக, அமெரிக்க சந்தையில் இந்திய பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்தது.

இந்தியா – அமெரிக்கா இடையிலான வர்த்தக உறவுகள் தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இரு நாடுகளும் பல்வேறு சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ள நிலையில், இந்த 50 சதவீத வரி குறைக்கப்படலாம் அல்லது ரத்து செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்நிலையில், இந்திய பொருட்கள் மீது விதிக்கப்பட்டுள்ள 50 சதவீத இறக்குமதி வரியை முழுமையாக ரத்து செய்யக்கோரி அமெரிக்க நாடாளுமன்றம்த்தில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ராஜா கிருஷ்ணமூர்த்தி, ரோஸ் மற்றும் மெரிக் வெஸ்சே ஆகிய மூன்று எம்.பி.க்கள் இணைந்து இந்தத் தீர்மானத்தை முன்வைத்துள்ளனர்.

இந்தியாவுக்கு விதிக்கப்பட்டுள்ள அதிக வரி அமெரிக்க நுகர்வோரின் வாழ்கைச் செலவுகளை உயர்த்துவதாகவும், இந்தியா – அமெரிக்கா உறவில் தேவையற்ற பதற்றத்தை உருவாக்குவதாகவும், மேலும் வர்த்தக விவகாரங்களில் நாடாளுமன்றத்தின் அதிகார எல்லையை மீறுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த தீர்மானம் விரைவில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.