பவுண்டரி கேட்ச் விதியில் கொண்டுவரப்பட்ட அதிரடி மாற்றம்! வீரர்களுக்கு ஐசிசி வைத்த செக்!

புதிய விதியின்படி, பவுண்டரி எல்லைக்கு வெளியே அந்தரத்தில் இருக்கும் ஒரு ஃபீல்டர் பந்தை ஒரு முறை மட்டுமே தொட முடியும்.

பவுண்டரி கேட்ச் விதியில் கொண்டுவரப்பட்ட அதிரடி மாற்றம்! வீரர்களுக்கு ஐசிசி வைத்த செக்!

கிரிக்கெட் போட்டிகளில் பவுண்டரி கேட்ச் பிடிப்பது தொடர்பான விதிமுறைகளில் ஐசிசி ஒரு முக்கிய மாற்றத்தை அறிவித்துள்ளது. 2023 பிக் பாஷ் லீக் போட்டியில் மைக்கேல் நெஸ்ஸர் பிடித்த 'பன்னி ஹாப்'  வகை கேட்ச் தொடர்பாக இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

மைக் நெஸ்ஸர் 2023 பிக் பாஷ் லீக் தொடரில் சிட்னி சிக்ஸர்ஸுக்கு எதிராக பிரிஸ்பேன் ஹீட் அணிக்காக ஒரு கேட்ச் பிடித்தார். அது அப்போது விதிப்படி சரியானதாக இருந்தாலும், கிரிக்கெட் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. 

ஆட்டத்தின் உணர்வுக்கு எதிரானது என பலர் கருதினர். இந்த சர்ச்சைக்குரிய கேட்ச் போன்ற நிலைகளைத் தவிர்க்கவே இந்த புதிய விதி கொண்டுவரப்பட்டுள்ளது.

புதிய விதியின்படி, பவுண்டரி எல்லைக்கு வெளியே அந்தரத்தில் இருக்கும் ஒரு ஃபீல்டர் பந்தை ஒரு முறை மட்டுமே தொட முடியும். கேட்ச்சை நிறைவு செய்ய, பந்தை பிடித்த பிறகு ஃபீல்டர் பவுண்டரி எல்லைக்குள் முழுமையாக வந்துவிட வேண்டும். 

எல்லைக் கோட்டுக்கு வெளியே அந்தரத்தில் இருக்கும்போதே பந்தை இரண்டாவது முறை தொட்டாலோ, அல்லது பந்தைத் தொட்ட பிறகு ஃபீல்டர் எல்லைக்கு வெளியே தரையிறங்கிவிட்டாலோ அது பவுண்டரியாகக் கருதப்படும்.

இந்த புதிய விதி ஐசிசி (ICC) யின் நிபந்தனைகளில் இந்த மாதம் இணைக்கப்படும். குறிப்பாக, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் ஒரு பகுதியாக ஜூன் 17ஆம் தேதித தொடங்கும் இலங்கை - வங்கதேசம் இடையிலான போட்டியிலிருந்து இது அமலுக்கு வரும். 

இருப்பினும், எம்.சி.சி. விதிகளில் இது அக்டோபர் 2026 இல் முறையாக சேர்க்கப்படும். இந்த மாற்றம், நவீன ஃபீல்டிங் நுட்பங்களுக்கு புதிய வடிவம் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஹர்லீன் தியோல், அலெக்ஸ் ஹேல்ஸ் போன்றவர்கள் பிடித்த கேட்சுகள் தொடர்ந்து சட்டப்பூர்வமாக இருக்கும், ஏனெனில் அவர்கள் பந்தை இறுதியாக தொடும்போது பவுண்டரி எல்லைக்குள் இருந்தார்கள். ஆனால், காற்றில் பலமுறை பந்தை தொட்டு பிடிக்கும் நடைமுறை இனி அனுமதிக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.