இலங்கை வீரருக்கு மரியாதை... வங்கதேச அணியின் நெகிழ்ச்சி சம்பவம்!

ஏஞ்சலோ மேத்யூஸ் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்ய வந்தபோது எதிரணியான வங்கதேச அணியைச் சேர்ந்த வீரர்கள் அவருக்கு வரவேற்பு அளித்து இருபுறமும் நின்ற சம்பவம் ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது.

இலங்கை வீரருக்கு மரியாதை... வங்கதேச அணியின் நெகிழ்ச்சி சம்பவம்!

இலங்கை அணியின் மூத்த வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்ய வந்தபோது எதிரணியான வங்கதேச அணியைச் சேர்ந்த வீரர்கள் அவருக்கு வரவேற்பு அளித்து இருபுறமும் நின்ற சம்பவம் ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது.

2023 ஒருநாள் போட்டி உலகக் கோப்பையின்போது, ஏஞ்சலோ மேத்யூஸ் பேட்டிங் செய்ய தாமதமானதை வைத்து வங்கதேச அணி அவரை "டைம் அவுட்" செய்த சம்பவம் இரு அணிகளுக்கும் இடையேயும் மனக்கசப்பை ஏற்படுத்தியிருந்தது. 

அதன் பிறகு நடந்த பல்வேறு கிரிக்கெட் தொடர்களின்போதும் இரு அணி வீரர்களும் அந்த விவகாரத்தை வைத்து ஒருவரை ஒருவர் சீண்டிக்கொண்ட நிலையில் தான், இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதி வருகின்றன. 

இந்தத் தொடரின் முதல் போட்டியுடன் ஏஞ்சலோ மேத்யூஸ் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து தனது கடைசி போட்டியில் விளையாட வந்தபோது, முதல் இன்னிங்ஸின் போது இருபுறமும் நின்று பேட்டை வைத்து "கார்ட் ஆஃப் ஆனர்" எனப்படும் மரியாதையை செய்தனர்.

வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்து 495 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மூன்றாவது நாளில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸ் பேட்டிங் செய்தது. அப்போது இரண்டு விக்கெட்டுகள் விழுந்த பிறகு, ஏஞ்சலோ மேத்யூஸ் நான்காம் வரிசையில் பேட்டிங் செய்ய வந்தார்.

அவர் ஆடுகளத்துக்குள் வரும்போது, வங்கதேச அணியைச் சேர்ந்த வீரர்கள் இருபுறமும் நின்று கைதட்டி ஏஞ்சலோ மேத்யூஸை வரவேற்ற நிகழ்வு கிரிக்கெட் உலகில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த போட்டியில் ஏஞ்சலோ மேத்யூஸ் 69 பந்துகளில் 39 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.