ஆசிய கோப்பையில் இந்திய அணிக்கு அபார வெற்றி! திலக் வர்மாவின் சிக்ஸரில் ஆட்டம் முடிந்தது
சுப்மன் கில் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பஹீம் அஷ்ரஃப் வீசிய 10வது ஓவரில் 28 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து க்ளீன் போல்டானார். மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்ய வந்த சூர்யகுமார் யாதவ் 3 பந்துகளை மட்டுமே சந்தித்து ஆட்டமிழந்தார்.
2025 ஆசியக் கோப்பையின் (2025 Asia Cup) சூப்பர் 4 சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில், இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவு செய்தார்.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணியில் பர்ஹான் அதிகபட்சமாக 58 ரன்கள் எடுத்திருந்தார். இந்திய அணியின் பந்துவீச்சில் சிவம் துபே 2 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்ட்யா மற்றும் குல்தீப் யாதவ் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தனர்.
172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர். அபிஷேக் சர்மா களமிறங்கியவுடன், அவர் எதிர்கொண்ட முதல் பந்திலேயே ஒரு பெரிய சிக்ஸரை அடித்தார். ஷாஹீன் அப்ரிடி வீசிய பவுன்சரை அவர் பின் பக்கம் திருப்பி பவுண்டரிக்கு அனுப்பினார்.
மறுமுனையில் சுப்மன் கில்லும் தன் பங்கிற்கு பவுண்டரிகளை விளாச, இந்திய அணி வெறும் 4 ஓவர்களிலேயே 50 ரன்களைக் கடந்து வலுவான தொடக்கத்தை அளித்தது. தொடர்ந்து அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா, வெறும் 24 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். அதன்பின்னர், இந்திய அணி 8.4 ஓவர்களில் 100 ரன்களைக் கடந்தது.
சுப்மன் கில் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பஹீம் அஷ்ரஃப் வீசிய 10வது ஓவரில் 28 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து க்ளீன் போல்டானார். மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்ய வந்த சூர்யகுமார் யாதவ் 3 பந்துகளை மட்டுமே சந்தித்து ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து, சிறப்பாக விளையாடி வந்த தொடக்க வீரர் அபிஷேக் சர்மா, 39 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் உதவியுடன் அப்ரார் பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அதன்பிறகு களமிறங்கிய சஞ்சு சாம்சன் மற்றும் திலக் சர்மா சற்று நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியின் ஸ்கோர் எண்ணிக்கையை உயர்த்தத் தொடங்கினர். இருப்பினும், நிதானமாக விளையாடிய சஞ்சு சாம்சன், 17 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 13 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அந்த நேரத்தில், இந்திய அணி வெற்றிபெற 20 பந்துகளில் 24 ரன்கள் தேவைப்பட்டது. களத்துக்கு வந்த ஹர்திக் பாண்ட்யா, ஹாரிஸ் ராஃப் வீசிய முதல் பந்திலேயே பவுண்டரியை விரட்டி இந்திய ரசிகர்களின் பதட்டத்தைக் குறைத்தார்.
களத்தில் இருந்த திலக் வர்மா ஒரு சிக்ஸர் தூக்க, மொத்தமாக அந்த ஓவரில் 10 ரன்கள் கிடைத்தது. கடைசி 9 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே வெற்றிக்கு தேவை என்ற நிலையில், திலக் வர்மா மீண்டும் ஒரு சிக்ஸரைத் தூக்கினார். வெற்றிக்கு 2 ரன்கள் மட்டுமே தேவை என்ற சூழலில், திலக் வர்மா பவுண்டரி அடித்து 18.5 ஓவர்களில் இந்திய அணிக்கு வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார்.
