புள்ளிப்பட்டியலில் ஆப்கானிஸ்தானுக்கு அடித்த இரட்டை அதிஷ்டம்... இலங்கை செய்த மெகா சொதப்பல்

Key Points
  • 2023 உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணியின் தோல்வி ஆப்கானிஸ்தான் அணிக்கு இரண்டு நன்மைகளை செய்துள்ளது.
புள்ளிப்பட்டியலில் ஆப்கானிஸ்தானுக்கு அடித்த இரட்டை அதிஷ்டம்... இலங்கை செய்த மெகா சொதப்பல்

2023 உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணியின் தோல்வி ஆப்கானிஸ்தான் அணிக்கு இரண்டு நன்மைகளை செய்துள்ளது.

அதில் ஒன்று - இலங்கை அணி பங்களாதேஷ் அணியிடம் தோல்வி அடைந்து அரை இறுதி வாய்ப்பை இழந்தததால் ஆப்கானிஸ்தான் அணிக்கு இருந்த மூன்று அரை இறுதி போட்டியாளர்களில் ஒரு அணி வெளியேறி இருக்கிறது.

இதை விட பெரிய நன்மை, ஆப்கானிஸ்தான் அணி 2025 சாம்பியன்ஸ் ட்ராபி தொடருக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளது. இது இந்த உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணி அரை இறுதிக்கு முன்னேறாமல் போனாலும் அந்த அணிக்கு கிடைக்கும் பெரிய பரிசாகும்.

2025 சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் பங்கேற்கப் போகும் எட்டு அணிகளை தேர்வு செய்ய புதிய முறை கடைபிடிக்கப்பட உள்ளது. தொடரை நடத்தும் பாகிஸ்தான் அணியை தவிர்த்து 2023 உலகக்கோப்பை லீக் சுற்றில் முதல் ஏழு இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக சாம்பியன்ஸ் ட்ராபி தொடருக்கு தகுதி பெறும்.

அந்த வகையில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக இலங்கை அணி தோல்வி அடைந்ததால் ஆப்கானிஸ்தான் அணி தன் அடுத்த இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்தால் கூட புள்ளிப் பட்டியலில் நிச்சயம் ஏழாவது இடத்தை பெற்று விடும். ஆப்கானிஸ்தான் அணி தற்போது புள்ளிப் பட்டியலில் 7 போட்டிகளில் ஆடி 6 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளது.

அந்த அணி அடுத்து ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிராக ஆட வேண்டிய நிலையில் உள்ளது. அந்த இரண்டு அணிகளுமே வலுவான அணிகள் என்பதால் ஆப்கானிஸ்தான் அணி அடுத்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெறும் என உறுதியாக கூற முடியாது. இந்த நிலையில் தான் இலங்கை அணியின் தோல்வி, ஆப்கானிஸ்தான் அணிக்கு சாம்பியன்ஸ் ட்ராபி இடத்தை அளித்து இருக்கிறது.

மற்றபடி, இலங்கை - பங்களாதேஷ் போட்டிக்கு பின் புள்ளிப் பட்டியலில் ஒரே ஒரு மாற்றமாக இலங்கை அணி எட்டாவது இடத்துக்கு சரிந்துள்ளது. பங்களாதேஷ் ஏழாவது இடத்துக்கு முன்னேறி தன் சாம்பியன்ஸ் ட்ராபிக்கான இடத்தை நோக்கி ஒரு படி முன்னேறி இருக்கிறது.

இலங்கை, பங்களாதேஷ் இரண்டு அணிகளுக்கும் 4 புள்ளிகள் பெற்று இருக்கின்றன. இங்கிலாந்து அணி தற்போது 2 புள்ளிகளுடன் இருந்தாலும், இன்னும் இரண்டு லீக் போட்டிகள் மீதமுள்ளதால் அதில் வெற்றி பெற்று பங்களாதேஷ் அணியை முந்தி சாம்பியன்ஸ் ட்ராபி இடத்தை கைப்பற்றவும் வாய்ப்பு உள்ளது.

நெதர்லாந்து அணி 4 புள்ளிகளுடன் இருக்கும் நிலையில், அந்த அணிக்கும் இன்னும் இரண்டு லீக் போட்டிகள் மீதமுள்ளன. அந்த அணி அடுத்து இங்கிலாந்து மற்றும் இந்தியாவுக்கு எதிராக ஆட உள்ளது. அதில் வெற்றி பெறுவது கடினம் என்றாலும், வெற்றி பெற்றால் சாம்பியன்ஸ் ட்ராபி செல்லலாம்.

Click for more latest கிரிக்கெட் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
Add ColomboTamil As A Trusted Source Add as a preferred source on Google