அமெரிக்காவை உலுக்கிய சக்திவாய்ந்த பனிப்புயல்: 30 பேர் உயிரிழப்பு, கோடிக்கணக்கான மக்கள் பாதிப்பு
கடந்த சில நாட்களாக கிழக்கு டெக்சாஸ் முதல் வடக்கு கரோலினா, பென்சில்வேனியா, ஹட்சன் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் கனமழையுடன் கூடிய கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது.
அமெரிக்காவில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கியதிலிருந்து கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவு தீவிரமடைந்துள்ளது. அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் உருவான சக்திவாய்ந்த பனிப்புயலுக்கு ‘பெர்ன்’ என பெயரிடப்பட்டு, National Weather Service மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த புயல் மேற்கு மற்றும் மத்திய மேற்கு மாகாணங்களை கடுமையாக தாக்கியுள்ளது.
கடந்த சில நாட்களாக கிழக்கு டெக்சாஸ் முதல் வடக்கு கரோலினா, பென்சில்வேனியா, ஹட்சன் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் கனமழையுடன் கூடிய கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாக, நியூ மெக்சிகோ முதல் நியூ இங்கிலாந்து வரை பரவியுள்ள பகுதிகளில் சுமார் 14 கோடி மக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பனிப்புயலின் தீவிரத்தை தொடர்ந்து, Donald Trump தெற்கு கரோலினா, விர்ஜீனியா, ஜியோர்ஜியா, வடக்கு கரோலினா, மாரிலாந்து, கென்டகி உள்ளிட்ட 12 மாகாணங்களில் அவசர நிலையை அறிவிக்க உத்தரவிட்டார். அர்கன்சாஸ் முதல் நியூ இங்கிலாந்து வரை புயல் பரவியதால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
உறைபனி குளிர், மின்சாரத் தடை மற்றும் போக்குவரத்து முடக்கம் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். பிட்ஸ்பர்க் நகரத்திற்கு வடக்கே உள்ள பகுதிகளில் 20 அங்குலம் வரை பனி பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பனிப்புயலில் சிக்கி பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட 30 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் நியூயார்க்கில் மட்டும் 8 பேர் உயிரிழந்ததாகவும், மாசசூசெட்ஸ் மற்றும் ஓஹியோ மாநிலங்களில் தலா 2 பேர் உயிரிழந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த கடும் பனிப்பொழிவு காரணமாக அமெரிக்கா முழுவதும் சுமார் 9 லட்சம் வீடுகளுக்கு மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டது. வெளிநாடுகள் மற்றும் உள்ளூருக்குச் செல்லவிருந்த சுமார் 11,500 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. பல நெடுஞ்சாலைகள் மூடப்பட்டதுடன், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
