பிரபல நடிகர் ரோபோ சங்கர் காலமானார் - சோகத்தில் ரசிகர்கள்!
சென்னை: பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 46. இன்று (செப்டம்பர் 18) சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 46. இன்று (செப்டம்பர் 18) சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கலக்கப் போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலம் ரோபோ சங்கர் பிரபலமானார். தனது அபாரமான மிமிக்ரி திறமை மூலம் தொலைக்காட்சி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றார். இவரும் சுட்டி அரவிந்தும் சேர்ந்து செய்த நகைச்சுவைகள் அப்போது மிகவும் பிரபலமாகின. மேடைகளில் ரோபோ போல ஆடிய நடனத்தின் மூலம் இவருக்கு "ரோபோ சங்கர்" என்ற பெயர் வந்தது.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்குப் பிறகு, தொடர்ந்து பல்வேறு மேடை நிகழ்ச்சிகளில் ஸ்டாண்ட்-அப் காமெடி மற்றும் மிமிக்ரி செய்து வந்த இவர், திரைப்படங்களிலும் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார்.
விஜய் சேதுபதி நடித்த ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தில்தான் இவருக்கு ஒரு முழுநீள கதாபாத்திரம் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து ‘கப்பல்’, ‘மாரி’, ‘வாயை மூடி பேசவும்’ போன்ற அடுத்தடுத்த பட வாய்ப்புகளையும் பெற்றார். விஷ்ணு விஷாலின் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் இவரது நகைச்சுவை மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மஞ்சள் காமாலை ஏற்பட்டதால் கடுமையாக உடல் எடை குறைந்து காணப்பட்டார் ரோபோ சங்கர். பின்னர் மெல்ல தேறி வந்த அவர் மீண்டும் திரைப்படங்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தோன்றத் தொடங்கினார்.
இந்த நிலையில், அண்மையில் உடல்நலக் குறைவால் சென்னை பெருங்குடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி ரோபோ சங்கர் உயிரிழந்தார்.
ரோபோ சங்கரின் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது இரங்கற்பாவில், "ரோபோ சங்கர் ரோபோ புனைப்பெயர் தான் என் அகராதியில் நீ மனிதன் ஆதலால் என் தம்பி. போதலால் மட்டும் எனை விட்டு நீங்கி விடுவாயா நீ? உன் வேலை நீ போனாய் என் வேலை தங்கிவிட்டேன். நாளையை எமக்கென நீ விட்டுச் சென்றதால் நாளை நமதே" என்று குறிப்பிட்டுள்ளார்.
