அரசு சொல்வதை மறுக்க முடியாது.. எங்கள் கையில் எதுவும் இல்லை.. பாகிஸ்தான் கேப்டன் சல்மான்

2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பைப் போட்டியில், இந்தியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.

அரசு சொல்வதை மறுக்க முடியாது.. எங்கள் கையில் எதுவும் இல்லை.. பாகிஸ்தான் கேப்டன் சல்மான்

2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பைப் போட்டியில், இந்தியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. பிப்ரவரி 15ஆம் தேதி கொழும்பில் நடைபெற இருந்த இந்த முக்கியமான போட்டியை பாகிஸ்தான் அணி புறக்கணிக்கும் என அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதற்கு முன்பு, பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து இந்தியாவுக்குச் செல்ல மறுத்த பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, டி20 உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து நீக்கப்பட்டிருந்தது. இந்தியாவில் நடைபெறவிருந்த சில போட்டிகளை வேறு நாட்டிற்கு மாற்ற வேண்டும் என பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் ஐசிசியிடம் கோரிக்கை வைத்திருந்தது. ஆனால் போட்டி அட்டவணையில் எந்த மாற்றமும் இல்லை என ஐசிசி உறுதியாக தெரிவித்தது. இந்த பின்னணியிலேயே தற்போது பாகிஸ்தானின் புறக்கணிப்பு முடிவு வெளிவந்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் சல்மான் அலி அகாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணிப்பது முழுக்க முழுக்க அரசின் முடிவு என்றும், வீரர்களின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது என்றும் தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டிக்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அகா, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வழியாக அரசு வழங்கும் அறிவுறுத்தல்களை மட்டுமே தாங்கள் பின்பற்றுவோம் என்றார். “நாங்கள் இலங்கைக்கு செல்வோம். ஆனால் அது எங்களின் தனிப்பட்ட முடிவு அல்ல. அரசு மற்றும் பிசிபி தலைவர் எதைச் சொல்கிறார்களோ, அதைத்தான் செய்ய வேண்டும். அதற்கு மேல் எங்களால் எதுவும் செய்ய முடியாது,” என அவர் கூறினார்.

இதனிடையே, பாகிஸ்தான் அரசின் இந்த முடிவை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கடுமையாக கேள்வி எழுப்பியுள்ளது. இத்தகைய புறக்கணிப்புகள் கடுமையான விளைவுகளையும், அபராத நடவடிக்கைகளையும் ஏற்படுத்தக்கூடும் என ஐசிசி எச்சரித்துள்ளது. பாகிஸ்தான் அணியை போட்டியில் விளையாட வைக்க, ஐசிசி தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.