இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் யாருக்கு வெற்றி? மேத்யூ ஹெய்டன் கணிப்பு

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ரோகித் சர்மா ஓய்வு பெற்றதை அடுத்து, புதிய கேப்டனாக 25 வயதான சுப்மன் கில் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் யாருக்கு வெற்றி? மேத்யூ ஹெய்டன் கணிப்பு

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளதுடன், முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 20-ந் தேதி லீட்சில் தொடங்குகிறது. 

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ரோகித் சர்மா ஓய்வு பெற்றதை அடுத்து, புதிய கேப்டனாக 25 வயதான சுப்மன் கில் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

இந்த நிலையில், கேப்டன்ஷிப்பில் போதிய அனுபவம் இல்லாத சுப்மன் கில் தலைமையில் இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் எப்படி விளையாடப்போகிறது என்ற எதிர்பார்ப்பு காணப்படுகின்றது.

அத்துடன் இது 4-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இந்திய அணியின் முதல் போட்டி என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

இந்த தொடரில் வெற்றி பெற வாய்ப்புள்ள அணி குறித்து பல முன்னாள் வீரர்கள் தங்களது கணிப்பினை வெளியிட்டு வரும் நிலையில், அந்த வரிசையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான மேத்யூ ஹெய்டன் இந்த தொடரில் இந்தியா வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக கணித்துள்ளார்.

"இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் அவ்வளவு சிறந்தவர்கள் என்று நான் நினைக்கவில்லை, அவர்களிடம் நிறைய காயமடைந்த பந்து வீச்சாளர்கள் உள்ளனர். மேலும் பல முன்னணி பந்துவீச்சாளர்கள் ஓய்வு பெற்று விட்டனர். அதுதான் இங்கிலாந்துக்கு சவாலாக இருக்கும். 

இங்கிலாந்தின் வடக்கு பகுதியில் நடைபெறும் போட்டிகளில் நிலவும் சூழ்நிலைகள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். அங்கு நடைபெறும் போட்டிகளை வெல்வது இந்த தொடரை இந்தியாவுக்கு சாதகமானதாக மாற்றும். எனவே இந்த தொடரில் இந்தியா வெற்றி பெறவே வாய்ப்புள்ளது" என்று கூறினார்.

இங்கிலாந்து அணியில் மார்க் வுட், ஆர்ச்சர் போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் காயத்தில் இருந்து மீளாமல் உள்ளதுடன், ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் போன்ற முன்னணி வீரர்கள் ஓய்வு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.