இனிதான் இருக்கு கச்சேரி... இந்திய ஜாம்பவானை தூக்கிய ஆஃப்கானிஸ்தான்!

இனிதான் இருக்கு கச்சேரி... இந்திய ஜாம்பவானை தூக்கிய ஆஃப்கானிஸ்தான்!

கடந்த சில ஆண்டுகளாக ஆஃப்கானிஸ்தான் அணியின் வளர்ச்சி என்பது யாரும் கற்பனை கூட செய்யாதது. ஆசிய கோப்பை தொடரின் போது பெயருக்காக சேர்க்கப்படும் அணிகளில் ஒன்றாக இருந்த ஆஃப்கானிஸ்தான் அணி, அண்மை காலங்களில் ஆசிய கோப்பையை வெல்வதற்கான முனைப்புடன் விளையாடி வருகிறது. 

இதனால் வரும் உலகக்கோப்பை தொடரில் ஆஃப்கானிஸ்தான் அணி நிச்சயம் ஜாம்பவான் அணிகளுக்கு சவால் அளிக்கும் என்று பார்க்கப்படுகிறது.

குறிப்பாக சென்னை, லக்னோ, டெல்லி உள்ளிட்ட மைதானங்களில் ஆஃப்கானிஸ்தான் அணி விளையாடவுள்ளது. இந்த 3 மைதானங்களும் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், ஆஃப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சாளர்களின் ஆட்டம் வேற லெவலில் இருக்கும் என்று பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய ஜாம்பவானையும் ஆலோசகராக ஆஃப்கானிஸ்தான் அணியில் இணைத்துள்ளது.

1992 முதல் 2000 ஆண்டு வரை இந்திய அணிக்காக 196 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 5359 ரன்களை விளாசியாவர் அஜய் ஜடேஜா. 1996ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் வாக்கர் யூனுஸ்-க்கு எதிராக கடைசி 2 ஓவர்களில் 40 ரன்களை விளாசியவர். 

அந்தப் போட்டியில் 25 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தது இன்றும் ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது. கீழ்வரிசையில் ஆடும் பேட்ஸ்மேன்கள் கடைசி ஓவர்களில் அட்டாக் செய்ய வேண்டும் என்பது அஜய் ஜடேஜா மூலம் எழுதப்படாத விதியாக கொண்டு வரப்பட்டது.

இந்த நிலையில் அஜய் ஜடேஜாவை ஆஃப்கானிஸ்தான் அணி உலகக்கோப்பை தொடரில் ஆலோசகராக நியமித்துள்ளது. சூதாட்ட புகாரில் சிக்கி கிரிக்கெட் வாழ்க்கையை இழந்தாலும், ஐபிஎல் தொடரில் 2015ஆம் ஆண்டு டெல்லி அணியின் பயிற்சியாளராக இருந்தவர் அஜய் ஜடேஜா. 

அதேபோல் ஹரியானா, ராஜஸ்தான், டெல்லி உள்ளிட்ட ஆடுகளங்கள் குறித்து முழுமையான அறிவை பெற்றுள்ளவர் அஜய் ஜடேஜா. இதனால் அஜய் ஜடேஜாவின் இணைப்பு, ஆஃப்கானிஸ்தான் அணிக்கு கூடுதல் பலத்தை கொடுக்கும் என்று பார்க்கப்படுகிறது.