இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லுமா? இங்கிலாந்து, ஆஸ்திரேலியா எதிர்ப்பு... சிக்கலில் ஜெய் ஷா.. இலங்கைக்கு வாய்ப்பு?

Key Points
  • கடைசியாக 2017ஆம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றிபெற்றது.
இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லுமா? இங்கிலாந்து, ஆஸ்திரேலியா எதிர்ப்பு... சிக்கலில் ஜெய் ஷா.. இலங்கைக்கு வாய்ப்பு?

கடைசியாக 2017ஆம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றிபெற்றது.

இந்த நிலையில், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் 8 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நடக்கவுள்ளது. 

இந்த நிலையில் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க 8 அணிகள் தகுதிபெற்றுள்ளன. 

சொந்த மண்ணில் நடப்பதால், பாகிஸ்தான் அணி கட்டாயம் விளையாடும். இது பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. 

அதேபோல் குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளன. 

இதனிடையே பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் சார்பாக ஐசிசி நிர்வாகத்திடம் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான உத்தேச அட்டவணை அளிக்கப்பட்டது.

அதில் இந்திய அணி விளையாடும் போட்டிகள் அனைத்தும் லாகூர் மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்ததுடன், இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மார்ச் 1ல் லாகூரில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. 

இதற்கு பிசிசிஐ தரப்பில் எந்த ஒப்புதலும் அளிக்கப்படவில்லை. இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு பயணிக்காது என்று தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கு பதிலாக ஆசியக் கோப்பை தொடரை போல் ஹைபிரிட் மாடலில் சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்த பிசிசிஐ தரப்பில் ஐசிசியிடம் முறையிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்திய அணி விளையாடும் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகம் அல்லது இலங்கையில் நடத்த பிசிசிஐ தரப்பில் கோரவுள்ளதாக தெரிய வந்துள்ளது.

8 டாப் அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இந்திய அணியை மட்டும் ஸ்பெஷலாக ஐசிசி பார்க்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

ஏனென்றால் இந்திய அணி இலங்கை அல்லது ஐக்கிய அரபு அமீரகத்தில் விளையாடினால், இந்திய அணியுடன் விளையாடும் அணிகளும் விமானம் ஏறி பயணிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படும்.

இதற்கு மற்ற நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் ஒப்புதல் அளிக்க வாய்ப்பு குறைவாகும். குறிப்பாக இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியங்கள் நிச்சயம் ஆதரவு அளிக்காது என்றே பார்க்கப்படுகிறது.

பிசிசிஐ தனிச்சையாக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலை உள்ளது. இதனால் இந்திய அணி பாகிஸ்தான் பயணிக்கவில்லை என்றால், ஐசிசி மாற்று அணியை தேர்வு செய்ய வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது. 
ஒருவேளை ஐசிசி மாற்று அணியை தேர்வு செய்தால், அந்த வாய்ப்பு இலங்கை அணிக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Click for more latest கிரிக்கெட் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
Add ColomboTamil As A Trusted Source Add as a preferred source on Google