காதலியால் சிக்கிய ‘எல் மென்சோ’ – 19 ஆண்டுகள் தப்பித்த போதைப்பொருள் தலைவரின் கடைசி தருணங்கள்

இந்த ஆபரேஷனை முழுமையாக Mexican Army முன்னெடுத்தது. அமெரிக்கா உளவுத் தகவல் வழங்கியிருந்தாலும், நேரடி ராணுவ நடவடிக்கையில் ஈடுபடவில்லை என மெக்சிகோ அரசு விளக்கம் அளித்துள்ளது.

காதலியால் சிக்கிய ‘எல் மென்சோ’ – 19 ஆண்டுகள் தப்பித்த போதைப்பொருள் தலைவரின் கடைசி தருணங்கள்

மெக்சிகோவில் மிகவும் தேடப்பட்டு வந்த போதைப்பொருள் கும்பல் தலைவரான ‘எல் மென்சோ’ என அறியப்படும் Nemesio Oseguera Cervantes ராணுவ நடவடிக்கையில் சிக்கி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பல ஆண்டுகளாக சட்ட அமலாக்க அமைப்புகளுக்கு எட்டாதவராக இருந்த இவர், சமீபத்தில் நடத்தப்பட்ட அதிரடி ஆபரேஷனில் பிடிபட்டார். கடுமையாக காயமடைந்த அவர், சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டபோது உயிரிழந்ததாக மெக்சிகோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆபரேஷனை முழுமையாக Mexican Army முன்னெடுத்தது. அமெரிக்கா உளவுத் தகவல் வழங்கியிருந்தாலும், நேரடி ராணுவ நடவடிக்கையில் ஈடுபடவில்லை என மெக்சிகோ அரசு விளக்கம் அளித்துள்ளது.

மெக்சிகோ பாதுகாப்புத் துறை அமைச்சர் Ricardo Trevilla தெரிவித்த தகவலின்படி, எல் மென்சோவின் இருப்பிடத்தை கண்டறிவதில் முக்கிய பங்கு வகித்தது அவரது நெருங்கிய பெண் தொடர்பின் நடமாட்டமே. சுமார் 19 ஆண்டுகளாக பாதுகாப்பான மறைவிடங்களில் தங்கி வந்த இவர், ஜாலிஸ்கோ மாகாணத்தின் தபால்பா மலைப்பகுதியில் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவரது நெருங்கியவரின் நகர்வுகளை கண்காணித்த பாதுகாப்புப் படைகள், கார்டெல் உறுப்பினர்கள் அதிகம் திரண்டிருந்த இடத்தை அடையாளம் கண்டு சுற்றிவளைத்தன.

பாதுகாப்புப் படைகள் வளாகத்தை முற்றுகையிட்டபோது, ஆயுதத்துடன் இருந்த அவரது ஆதரவாளர்கள் எதிர்த்து துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து நடந்த துரத்தலில் காயமடைந்த நிலையில் எல் மென்சோ பிடிபட்டார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் வெளியேற்றப்பட்டபோதும் அவர் உயிரிழந்தார்.

இந்த நடவடிக்கைக்கு பின்னர், மெக்சிகோ முழுவதும் வன்முறை சம்பவங்கள் வெடித்துள்ளன. போதைப்பொருள் கும்பல்கள் நெடுஞ்சாலைகள் மறியல், வாகனங்களுக்கு தீ வைப்பது, வணிக வளாகங்களை தாக்குதல், பாதுகாப்புப் படைகள் மீது தாக்குதல் போன்ற செயல்களில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறைந்தது 25 தேசியக் காவல் படையினர் உயிரிழந்ததாகவும், சுமார் 30 கார்டெல் உறுப்பினர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

நிலைமை பதற்றமாக உள்ளதால், பல்வேறு மாகாண அரசுகளுடன் இணைந்து சட்டம்-ஒழுங்கை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மெக்சிகோ அதிபர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து India, United States, Canada உள்ளிட்ட நாடுகள் தங்கள் குடிமக்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளன.