பும்ரா குறித்து இன்னும் முடிவாகவில்லை... நான் அழுத்தத்தில் இருக்கிறேன் ... கம்பீர் பேச்சு
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் சுப்மன் கில் ஆகியோர் மும்பையில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி ஜூன் 20 முதல் ஆகஸ்ட் 4 வரை இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடத் திட்டமிடப்பட்டிருந்தத நிலையில், அணியில் இடம்பிடித்திருந்த வீரர்கள் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக இங்கிலாந்துக்கு புறப்பட்டுச் சென்றனர்.
ஐபிஎல் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியிருந்த அணிகளில் இடம்பெற்றிருந்த வீரர்கள் மட்டும் இங்கிலாந்துக்கு புறப்படாத நிலையில், ஐபிஎல் சீசன் நிறைவுற்றதால், மீதமிருக்கும் வீரர்கள், பயிற்சியாளர்கள் இங்கிலாந்து செல்லவுள்ளனர்.
இந்த நிலையில், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் சுப்மன் கில் ஆகியோர் மும்பையில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது, பும்ரா குறித்து பேசிய கவுதம் கம்பீர், "போதுமான பந்துவீச்சாளர்களை தேர்ந்தெடுத்திருக்கிறோம். வேகப்பந்துவீச்சாளர்கள் எந்த நிலையிலும் போட்டியை வெல்லக் கூடிய இடத்தில் இருக்கின்றனர். பும்ரா போன்ற ஒருவர் எத்தனை போட்டிகளில் விளையாடுகிறார் என்பதைப் பொறுத்து, எங்களுக்குச் சிறப்பாக இருக்கும்.
பும்ரா எந்த 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. போட்டியின் முடிவுகள், தொடரின் போக்கு ஆகியவற்றைப் பொறுத்து அது இருக்கும். பும்ரா போன்ற ஒருவரை மாற்றுவது கடினம். இருப்பினும் எங்களிடம் திறமையான வீரர்கள் உள்ளனர்" என்று கூறினார்.
மேலும், "நான் எப்போதும் அழுத்தத்தில் இருக்கிறேன். நியூசிலாந்து, ஆஸ்திரேலியா தொடர்களுக்குப் பிறகு அழுத்தத்தில் இருந்தேன். சாம்பியன்ஸ் டிராபிக்கு பிறகும் அழுத்தத்தில் இருந்தேன். ஒவ்வொரு சுற்றுப்பயணத்திலும் அழுத்தம் எப்போதும் இருக்கும்." என்றார்.
"சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டராக இருந்தாலும் சரி, வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டராக இருந்தாலும் சரி, எங்களுக்குப் பலன் தரக்கூடிய சிறந்த பிளேயிங் லெவனுடன் நாங்கள் விளையாடுவோம். டெஸ்ட் போட்டிகளில் 20 விக்கெட்டுகளை வீழ்த்துவதன் மூலம் மட்டுமே வெற்றி பெற முடியும்." என்று அவர் குறிப்பிட்டார்.