வெள்ளை மாளிகை நிருபர்கள் விருந்தில் துப்பாக்கிச் சத்தம் – டிரம்ப் அவசரமாக வெளியேற்றம்

வெள்ளை மாளிகை நிருபர்கள் விருந்தில் துப்பாக்கிச் சத்தம் – டிரம்ப் அவசரமாக வெளியேற்றம்

அதிபருடன் அவரது மனைவி மெலனியா, தலைமை ஆலோசகர் ஸ்டீபன் மில்லர் உள்ளிட்டோரும் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டதாகவும், அதிகாரிகள் விரைவாகவும் துணிச்சலாகவும் செயல்பட்டதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் எவருக்கும் காயத்தை ஏற்படுத்தவில்லை என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

வெள்ளை மாளிகை நிருபர்களுடனான விருந்தின்போது துப்பாக்கிச் சத்தம் கேட்டதால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உடனடியாக ரகசிய சேவையினரால் வெளியேற்றப்பட்டார். வாஷிங்டன் ஹில்டன் விடுதியில் நேற்றிரவு நடைபெற்ற இந்த நிகழ்வில் திடீரென வெடிப்புச் சத்தம் எழுந்ததும், பாதுகாப்புப் பணியினர் அதிபரைப் பத்திரமாக மேடையிலிருந்து அழைத்துச் சென்றனர்.

அதிபருடன் அவரது மனைவி மெலனியா டிரம்ப், தலைமை ஆலோசகர் ஸ்டீபன் மில்லர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளும் வெளியேற்றப்பட்டதாக சிபிஎஸ் நியூஸ் தெரிவித்துள்ளது.

ஆரம்பத்தில் இந்தச் சத்தம் துப்பாக்கிச் சூடாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகித்தனர். இதனிடையே, துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது செய்யப்பட்டிருப்பதாக டிரம்ப் தனது 'ட்ரூத் சோசியல்' பக்கத்தில் குறிப்பிட்டார்.

"ரகசிய சேவை மற்றும் இதர அதிகாரிகள் சிறப்பான பணியைச் செய்தனர். அவர்கள் விரைவாகவும் தைரியத்துடனும் செயல்பட்டனர்," என அவர் பதிவிட்டுள்ளார்.

சம்பவத்துக்குப் பின்னர், ஒரு அதிகாரி விரைவில் புதிய அறிவிப்பு வெளியாகும் என்றும், அதன் பின்னர் விருந்து தொடரும் என்றும் கூறினார். இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.