கிடுகிடுவென உயரும் எண்ணெய் விலை: ஹோர்முஸ் நீரிணை விநியோகத் தடையால் உலக நாடுகள் அதிர்ச்சி!
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் பதற்றத்தால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் (Crude Oil) விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, உலக எரிசக்தி விநியோகத்தின் இதயப்பகுதியாகக் கருதப்படும் ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பற்ற சூழல், இந்த விலை ஏற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
சர்வதேச சந்தையில் பிரெண்ட் (Brent) ரக கச்சா எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 106.80 டொலராக உயர்ந்துள்ளது. இது கடந்த புதன்கிழமை நிலவரத்தை விட 5% அதிகமான வளர்ச்சியாகும். கடந்த இரண்டு வாரங்களில் முதல் முறையாக எண்ணெய் விலை 100 டொலரைத் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகள் பரஸ்பரம் வர்த்தகக் கப்பல்களைக் கைப்பற்றி வருவதால், ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் 30% எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
மார்ச் மாதத்தில் மட்டும் உலகளாவிய எண்ணெய் விநியோகம் ஒரு நாளைக்கு 10.1 மில்லியன் பீப்பாய்கள் வரை குறைந்துள்ளதாக சர்வதேச எரிசக்தி முகவர் தெரிவித்துள்ளது. இந்த விநியோகத் தடையால் ஆசிய நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் கடும் விலையேற்றம் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
