ஒரே நாளில் சொதப்பிய இந்திய அணி... இங்கிலாந்து அணி வரலாற்று வெற்றி! இதுவே முதல் முறை!

பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி,  பந்துவீச்சில் மோசமாக செயல்பட்டதுடன், விராட் கோலி,ரோகித் சர்மா போன்ற வீரர்கள் இல்லாதது இதற்கு காரணம் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

ஒரே நாளில் சொதப்பிய இந்திய அணி... இங்கிலாந்து அணி வரலாற்று வெற்றி! இதுவே முதல் முறை!

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி,  பந்துவீச்சில் மோசமாக செயல்பட்டதுடன், விராட் கோலி,ரோகித் சர்மா போன்ற வீரர்கள் இல்லாதது இதற்கு காரணம் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

லீட்ஸில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் களமிறங்கிய இந்திய அணியில் ஜெய்ஸ்வால், கில், ரிஷப் பண்ட் ஆகியோர் முதல் இன்னிங்ஸில் சதம் அடித்தனர். 

ஒரு கட்டத்தில் 430 ரன்களுக்கு நான்கு விக்கெட் என்ற நிலையில் இருந்த இந்திய அணி 471 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தமையே தோல்விக்கு முக்கிய காரணமாக கூறப்படுகின்றது.

இங்கிலாந்து அணியில் ஆலி போப் சதம் விளாச, ஹாரி புரூக் 99 ரன்களில் ஆட்டம் இழந்த நிலையில், இங்கிலாந்து அணி 465 ரன்களில் சுருண்டது. இதில் இந்திய வீரர் பும்ரா ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 

ஆறு ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணியின் ராகுல், ரிஷப் பண்ட் ஆகியோர் அபாரமாக சதம் அடித்தனர். 

333 ரன்களுக்கு 5 விக்கெட் என்ற நிலையில் இருந்த இந்திய அணி அதன் பிறகு அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழக்க, 364 ரன்களில் சுருண்டதுடன்,  இங்கிலாந்து அணிக்கு 371 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இதனையடுத்து, விக்கெட் இழப்பின்றி 21 ரன்களுடன் ஐந்தாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த இங்கிலாந்து அணி, கடைசி நாளில் 350 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடியது.

எனவே, இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற வாய்ப்பு இருந்ததாக ரசிகர்கள் நம்பிய நிலையில், இந்தியா ஆதிக்கம் செலுத்திய டெஸ்ட் போட்டியில் கடைசி நாளில் ஒட்டுமொத்த கதையுமே மாறிவிட்டது.

ஜாக் கிராலி,பென் டக்கட் முதல் விக்கெட்டுக்கு 188 ரன்கள் சேர்க்க ஆலி போப் 8 ரன்களில் வெளியேறினார். பென் டக்கட் 149 ரன்களில் ஆட்டம் இழந்தார். அடுத்த பந்திலே அதிரடி வீரர் ஹாரி புரூக் அவுட் ஆனார். ஆனால் கேப்டன் ஸ்டோக்ஸ் 51 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார்.

இதனையடுத்து, இந்திய அணி வீரர்கள் எவ்வளவு முயற்சித்தும் விக்கெட் எடுக்க முடியாத நிலையில், ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. 

இந்த நிலையில், ஒரு அணியால் 5 சதம் அடிக்கப்பட்டும், தோல்வியை தழுவி இருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.