ஒரே அணியில் இந்தியா - பாகிஸ்தான் வீரர்கள் ஆட வாய்ப்பு: எப்படி சாத்தியம் தெரியுமா?

Key Points
  • இதுவரை இரண்டு முறை மட்டுமே ஆப்பிரிக்க - ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று உள்ளதுடன், சுமார் 17 ஆண்டுகளாக நடைபெறவில்லை.
ஒரே அணியில் இந்தியா - பாகிஸ்தான் வீரர்கள் ஆட வாய்ப்பு: எப்படி சாத்தியம் தெரியுமா?

ஒரே அணியில் இந்தியா - பாகிஸ்தான் வீரர்கள் 

ஆப்பிரிக்க - ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான முதற்கட்ட நடவடிக்கைகள் ஆரம்பித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், ஒரே அணியில் இந்தியா - பாகிஸ்தான் வீரர்கள் ஆட வாய்ப்பு காணப்படுகின்றது.

ஆப்பிரிக்க கிரிக்கெட் அமைப்பின் தலைவரும், ஜிம்பாப்வே கிரிக்கெட் அமைப்பின் தலைவருமான  டாவெங்வா முக்லானி இது பற்றி பேசி இருக்கின்றார்.

ஆப்பிரிக்க - ஆசிய கோப்பை கிரிக்கெட்டுக்கு நன்மையான விடயம் என்பதுடன், ஆப்பிரிக்க கிரிக்கெட் அமைப்புக்கு தேவையான நிதியையும் பெற்றுத் தருவதுடன், இரண்டு தரப்பிற்கும் அந்த நிதி உதவிகரமாக இருக்கும் என அவர் கூறியுள்ளார்.

அத்துடன், இது தொடர்பில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அதிகாரிகளுடன் பேசி உள்ளதுடன், ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிகள் பலவும் ஆப்பிரிக்க - ஆசிய கோப்பையை மீண்டும் கொண்டு வருவதில் ஆர்வமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் ஆப்பிரிக்க கிரிக்கெட் அமைப்பு அதிகாரிகள், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அதிகாரிகளுடன் மலேசியாவில் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாக கூறப்படுகிறது. 

இதுவரை இரண்டு முறை மட்டுமே ஆப்பிரிக்க - ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று உள்ளதுடன், சுமார் 17 ஆண்டுகளாக நடைபெறவில்லை.

2005 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் முதல் முறையாக  இந்த போட்டி நடைபெற்றதுடன், 2007 இல் இந்தியாவில் ஆப்பிரிக்க - ஆசிய கோப்பை போட்டி நடைபெற்றது. 

இந்த இரண்டு தடவைகளும் ஆசிய அணியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் ஒன்றாக விளையாடிய நிலையில், மீண்டும் ஆப்பிரிக்க - ஆசிய கோப்பை நடத்தப்பட்டால் அதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் ஒரே அணியில் இடம்பெறும் வாய்ப்பு ஏற்படும்.

2005 ஆப்பிரிக்க - ஆசிய கோப்பைக்கான ஆசிய லெவன் அணியில் பாகிஸ்தான் கேப்டன் இன்சமாம் உல் ஹக் தலைமையில் குமார் சங்ககாரா, வீரேந்தர் சேவாக், ஜாகீர் கான், அனில் கும்ப்ளே, சோயப் அக்தர். ஷாஹித் அப்ரிடி உள்ளிட்டோர் விளையாடினர்.

2007 இல் நடந்த ஆப்பிரிக்க - ஆசிய கோப்பை போட்டிக்கான ஆசிய லெவன் அணி மஹேல ஜயவர்த்தன தலைமையில் ஆடியதுடன், வீரேந்தர் சேவாக், சனத் ஜெயசூர்யா, யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், தோனி ஆகியோர் அணியில் இடம்பிடித்திருந்தனர்.

Click for more latest கிரிக்கெட் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
Add ColomboTamil As A Trusted Source Add as a preferred source on Google